தேவன் வருவாரா?
Original price was: ₹150.00.₹143.00Current price is: ₹143.00.
Description
இந்தத் தொகுதியில் இடம் பெற்றுள்ள கதைகள் அனைத்தும் ஏதோ ஒருவகையில் குழந்தைகளோடு சம்பந்தமுள்ள கதைகள்.
குழந்தைகளின் மனோ உணர்ச்சிகள், நடவடிக்கைகள், ஆசைகள், கனவுகள் முதலியவற்றைச் சித்தரித்து எழுத வேண்டுமென்ற முன்கூட்டிய திட்டத்துடன் எழுதப்பட்ட கதைகள் அல்ல இவை. அப்படிப்பட்ட ‘முன்கூட்டிய லட்சியத்துடன் சிலர் எழுதுவதையும், எழுதியவற்றைத் தொகுத்துத் தருவதையும் ஆவலோடு படித்திருக்கிறேன். அவர்களால் திட்டமிடப்பட்ட அந்த லட்சியத்தில் அவர்களே தோல்வியுறுவதைப் பார்த்தபோது, அப்படிப்பட்ட திட்டம் ஏதுமின்றி -எழுதுவதற்கு அடிப்படையான குறிக்கோள் எது என்று எனக்குள்ளேயே எதை நான் தீர்மானித்திருக்கிறேனோ, அந்தத் தீர்மானத்தின்படி நான் எழுதிய பல கதைகளுக்குள் -அவர்களுக்குக் கிடைக்காத வெற்றி, சில கதைகளில் எனக்குக் கிடைத்திருக்கிறதோ என்று நானே என் மனசுக்குள் ஒரு கேள்வியைப் போட்டுக் கொண்டு ‘பைலைப் புரட்டிப் பார்த்தபோது, குழந்தைகள் சம்பந்தப்பட்ட கதைகள் பல இருப்பதை நான் கண்டதன் விளைவே இத்தொகுதி.
இந்தக்கதைகளுள் குழந்தைகளின் மனோ உணர்ச்சி, நடவடிக்கைகள் முதலியவற்றை மட்டுமே சித்தரித்துள்ள கதைகளும் உண்டு. எனினும், கதை என்பது வெறும் வர்ணனையோ, வர்ணப் படமோ அல்ல. கலைப் பணியில் வாழ்க்கையின் பிரச்சனைகளைத் தவிர்க்க விரும்புவது, நான் ஏற்றுக் கொண்டுள்ள கலைக் கொள்கைக்குப் புறம்பானது. வாழ்க்கையின் பிரச்சனைகள் எவ்வளவு இயல்பானதோ, அவ்வளவு இயல்பாக இலக்கியத்தில் பிரச்னைகள் தாமாகவே ஊடுருவி நிற்கும்போது அதை வடிகட்டித் தர எனக்கென்ன உரிமை? அதனால்தான் இந்தக் கதைகளில் வரும் பெரும்பாலான குழந்தைகள் பூம்பஞ்சு மேனியோடு பொக்கை வாய் காட்டிச் சிரித்து மயக்கும் பிறத்தியார் வீட்டுக் குழந்தைகளாய் மட்டும் காட்சியளிக்காமல், வருங்கால வாழ்க்கைக்கு உத்தரவாத மில்லாமல் வாழவே உரிமை பெறாதவர்கள்-பெற்றுப் போட்டுவிட்ட சமூக அனாதைகளாயத் திரியும், என் சொந்த ரத்தமாகவும் காட்சியளிக்கிறார்கள்.
ஏன் இப்படிச் சொல்கிறேன் என்றால், எனது குழந்தைப் பருவமே ஏறத்தாழ அப்படித்தான் இருந்தது! என்னோடு சேர்ந்து விளையாடிய குழந்தைகளின் நிலைமை அந்தக் காலத்திலும் சரி, இன்றும் சரி -பெரும்பாலானவர்களின் பிறவியே அர்த்தமற்றது போல் தான் இருக்கிறது.
குழந்தை என்பது கதைப்பொருள் மட்டுமல்ல; அது ஒரு சமுதாயப் பிரச்னையும்கூட…
என்னதான் இந்நாட்டுப் பிரதமர், குழந்தைகளை, ‘பாரதத்தின் புஷ்பங்கள்’ என்று வர்ணித்தாலும், ஆண்டிற்கு ஒருமுறை ‘குழந்தைகள் தினம்’ கொண்டாடினாலும், அந்தம் புஷ்பங்கள், வளர்ந்து சமூகத்தின் காலடியில் மிதிபட்டு நசுங்கிச் சாகும் பிரத்தியட்ச வாழ்க்கையைக் காணும்போது வயிறு பற்றி எரிகிறது! ‘ஒ’ வென்று கதறியழத் தோன்றுகிறது!…
குழந்தைகளில் – பெற்றவள் பிச்சைக்காரியானாலும் விபசாரியானாலும், கூலிக்காரியானாலும், பைத்தியக்காரியானா எனக்குப் பேதங்கள் தோன்றவில்லை. யாருக்கும் தோன்றாத் மனிதன் மனிதனை வஞ்சிக்கப்போய், தன் இதயம் பேதம் பாராட்டாமல் நேசிக்கக்கூடிய குழந்தைகளின் நிலையைத் திரும்பி! கூடப் பார்க்காமல் ‘தன் குழந்தை’ என்ற கூட்டுக்குள் பாசத்தில் இரை தேடிக்கொள்வதன் மூலம் சிறுமைப்பட்டுப் போனான்.இல்லாவிட்டால் குழந்தையின் தலைவிதி, பரிதாபகரமான பட்டினியால் செத்துக் கொண்டிருக்கிற பெற்றோர்களின் பொறுப்பில் மட்டும் விடப்பட்டிருக்குமா? மனித உயிருக்குத் தன் சுவையைத் தான் சுமக்கும் வரையாவது உத்தரவாதம் வேண்டாமா?
கிறிஸ்தவர்கள் ‘தேவன் வரப் போகிறார்’ என்ற ஒரு திருநாளை எதிர்பார்த்திருப்பதுபோல் மனித சமூகம் ஒரு பொன்மயமான எதிர்காலம் வரப்போகிறது என்ற நம்பிக்கையில்தான் வாழ்கிறது.
எதுவும் வானத்திலிருந்து குதிக்காது; குதித்ததுமில்லை. மண்ணில், மனிதனால்தான் ஸ்தாபிக்கப்பட வேண்டும். தேவனும் மனித உருவில்தான் வருவார். சகல தத்துவார்த்திகளும், அவதார புருஷர்களும், மெய்ஞ்ஞானிகளும் தாயின் கருவில் உதித்துப்பிறந்து, முலைசுவைத்து, புழுதியளைந்து விளையாடி வளர்ந்த குழந்தைகளாய் இருந்தவர்கள்தான்.
ஒரு சிசுவின் பரிதாபகரமான மரணத்தை, வறுமைக்குப் பலியான கோரத்தைக் காணும்தோறும் ‘இந்த வாழ்க்கையின் ஈயத் தன்மையையே மாற்றிப் பொன்மயமாக்க வந்த ஒரு தேவனை, ஒரு அவதார புருஷனைப் பிறக்கும் போதே கொன்று விட்டோமோ’ என்றுதான் நெஞ்சு பதைக்கிறது.
இப்படிப்பட்ட நெஞ்சுப் பதைப்பிலும், பெற்ற குழந்தையை வளர்க்க வேண்டுமென்ற சில தாய்மார்கள் படும் சிரமங்களைக் கண்ட பொருமலிலும், அவர்கள் தோல்வியுற்றுக் கலங்கித் திசை தெரியாமல் நிற்பதை கண்ட தவிப்பிலும் உருவானவை சில கதைகள்.
உலகையே ஒரு விசித்திரமாய் விழித்து நோக்கி திகைப்போடு உங்களைப் பார்த்து. ‘களுக்’கென இதழ்கள் மலரச் சிரித்து உங்களை நோக்கிக் கைகளை நீட்டித்தாவும் இனிமையான குழந்தைக் கதைகளும் இதில் உண்டு.
அந்தக் கதைகள், ஏதேதோ உணர்வுகளில் உருவாகி அவ்வப்போது பல பத்திரிகைகளில் வெளிவந்தவை.
Additional information
| Weight | 0.15 g |
|---|---|
| Dimensions | 0.9 × 12 × 18 cm |
| Author | ஜெயகாந்தன் |
| Publisher | மீனாட்சி புத்தக நிலையம் |
| Pages | 190 |
| Format | paperback |
| ISBN |



Reviews
There are no reviews yet.